tamilnadu

img

வங்கிகளில் மோசடி செய்யப்பட்ட தொகை 73.8 சதவீதம் அதிகரிப்பு - ரிசர்வ் வங்கி தகவல்

கடந்த 2018-19 நிதியாண்டில் வங்கி மோசடிகள் 15 சதவீதமாகவும், மோசடி செய்யப்பட்ட தொகை 73.8 சதவீதமாகவும் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கை தெரிவிக்கின்றது.

கடந்த 2018-19 நிதியாண்டில், வங்கிகளில் மோசடி வழக்குகள் 6,801 ஆகவும், மோசடி செய்யப்பட்ட தொகை ரூ.71,500 கோடியாகவும் அதிகரித்துள்ளது. இதுவே கடந்த 2017-18 நிதியாண்டில், மோசடி வழக்குகள் 5,916 ஆகவும், மோசடி செய்யப்பட்ட தொகை ரூ.41,167 கோடியாகவும் இருந்தது. அதேபோல், அதிக அளவில் கடன் வழங்கி உள்ள பொதுத்துறை வங்கிகளின் 2018-19 ஆம் நிதியாண்டில் அதிக அளவில் மோசடிகளும் நடந்துள்ளன. இதற்கு அடுத்த இடங்களில் தனியார் வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கிகள் உள்ளன.

மேலும், 2018-19 நிதியாண்டில், ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்யப்பட்ட தொகை ரூ.52,200 கோடி ஆகும். ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக நடந்த மோசடிகளின் எண்ணிக்கை 0.1 சதவீதமாகும். அதே நேரம் 2018-19 நிதியாண்டில் இண்டர்நெட், கார்டுகள் மற்றும் டெபாசிட் தொடர்பாக நடந்த மோசடிகளின் எண்ணிக்கை 0.3 சதவீதம் மட்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.